நாட்டில் மிகப்பெரிய சுற்றுலா பயணக் கண்காட்சியான MATTA FAIR , கோலாலம்பூர் MITEC மையத்தில் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியின் இரண்டாம் நாளான இன்று, சிலாங்கூர் மாநில அரசு 86 கண்காட்சியாளர்களை உள்ளடக்கிய தனது பிரம்மாண்ட அரங்கின் மூலம் பல்வேறு புதிய சுற்றுலா முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்தியது.
குறிப்பாக, கிள்ளான் அரச மாநகர் மன்றத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'சமூகச் சுற்றுலா' திட்டம் இன்று முக்கிய கவனம் பெற்றது. கிள்ளான் அரச கேலரி, தெங்கு கிளானா சாலை, தஞ்சோங் ஹராப்பான் மற்றும் பூலாவ் கெத்தாம் உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கிய பாரம்பரிய மற்றும் கலாச்சாரச் சுற்றுலாத் தொகுப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், 'Trust' மற்றும் 'Mesti' போன்ற திட்டங்கள் மூலம் நிலையான சுற்றுப்பயணத்திற்கு சிலாங்கூர் முன்னுரிமை அளித்துள்ளது. கண்காட்சியின் சிறப்பம்சமாக 'Chocolate Museum' நிறுவனத்தின் விசேட குனாஃபா சாக்லேட் பார்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இம்முயற்சிகளின் மூலம் 2026-ஆம் ஆண்டு சிலாங்கூர் வருகை ஆண்டிற்கு 90 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக MATTA FAIR கண்காட்சியில் இன்று சனிக்கிழமை சிலாங்கூர் சுற்றுலா அரங்கங்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து, செய்தியாளர்களிடம் பேசிய மாநில வீடமைப்பு, ஊராட்சித்துறை மற்றும் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டாத்தோ என். சூ லிம் தெரிவித்தார்.
MATTA FAIR கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிலாங்கூர் அரங்கு வெறும் கண்காட்சி இடமல்ல, அது மாநிலத்தின் சுற்றுலாத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட ஒரு வியூகத் தளம் என்று அவர் குறிப்பிட்டார்.
2026 சிலாங்கூருக்கு வருகைத் தாருங்கள் ஆண்டிற்கான பிரச்சாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதில் இத்தகைய கண்காட்சிகள் முக்கியப் பங்கு வகிப்பதாகடாத்தோ என். சூ லிம் நம்பிக்கை தெரிவித்தார்.
நாளை ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இக்கண்காட்சியில், தள்ளுபடி விலையில் பல்வேறு சுற்றுலா பக்கேஜ்க்கள் பொதுமக்களுக்காகக் காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.










