கோலாலம்பூர் புக்கிட் கியாராவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த வந்த ரூமா பாஞ்சாங் மக்களின் வீட்டுப்பிரச்னைக்கு வரலாற்றுப்பூர்வமான தீர்வு காணப்பட்டுள்ளது. ரூமா பாஞ்சாங் மக்களின் வீடமைப்புத்திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்மாக தொடக்கி வைத்தார்.
இதன் மூலம் 98 குடும்பங்களின் 44 ஆண்டுகாலக் காத்திருப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டத்தின் பூமி பூஜை விழாவில் பேசிய பிரதமர் அன்வார் , இந்த திருப்புமுனையை ‘வரலாற்றுச் சிறப்புமிக்கது’ என வர்ணித்தார். மேலும், நாடு எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதற்கு இதுவொரு சிறந்த முன்மாதிரி என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய வீடுகளுக்குக் குடிபெயர்ந்த பிறகு, மக்கள் கூடுதல் செலவுகளால் சுமைக்குள்ளாகக் கூடாது என்பதற்காக, அவர்களின் பராமரிப்புச் செலவுகளை மானியமாக வழங்க அரசாங்கம் 1 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார். இந்த மானியம் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்டப் பயன்படும். இந்நிகழ்வில் கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோவும் கலந்து கொண்டார்.








