மலேசியாவின் விசா இல்லா நுழைவு கொள்கை உலகளாவிய ஆன்லைன் மோசடி கும்பல்களை ஈர்க்கும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது என போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இக்கொள்கை வெளிநாட்டு குற்றவாளிகள் இங்கு எளிதாக ஊடுருவ வழிவகுப்பதாக அவர் கூறினார்.
கடந்த மே 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், அனைத்துலுக ஆன்லைன் மோசடி கும்பலைச் சேர்ந்த 129 சீன நாட்டவர் மற்றும் 23 மலேசியர்கள் உட்பட 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 38 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 3 சொகுசு வீடுகள், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 20 ஆடம்பர வாகனங்கள் மற்றும் 12 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தங்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பல் ஹாங்காங், சீனா, கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு மக்களைக் குறிவைத்து ஏமாற்றி வந்துள்ளது என்று இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஐஜிபி காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதனிடையே சிங்கப்பூர் வட்டி கும்பல்களுடன் தொடர்புடைய 35 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், ஈப்போ போலீஸ் காவலில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கண்டறியப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐஜிபி மேலும் குறிப்பிட்டார்.










