கோலாலம்பூர், ஜூலை 03-
பூப்பந்து போட்டிகளில், அவசர சிகிச்சை உதவிக்கான நடைமுறையையும் கொள்கையையும் ஆராய, அனைத்துலக பூப்பந்து சம்மேளனம் - BWF முடிவெடுத்துள்ளது.
இந்தோனேசியா, யோக்யகர்த்தா -வில் நடைபெற்றுவந்த இளையோருக்கான பூப்பந்து போட்டியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, சீன வீரர் சாங் க்ஷி ஜியே மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அச்சம்மேளனம் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜப்பான் வீரர் கஸுமா கவானோ-வுக்கு எதிரான ஆட்டத்தின் போது, திடிரென கீழே சுருண்டு விழுந்த 17 வயது க்ஷி ஜியே-வுக்கு, அப்போட்டியின் மருத்துவ குழுவினர் முதலுதவியை தாமதமாக வழங்கியதாலேயே, அவரது உயிர் பிரிந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
ஆயினும், தங்களது மருத்துவ குழுவினரின் அந்நடவடிக்கையை, இந்தோனேசியாவின் பூப்பந்து சங்கம் - PBSI தற்காத்து பேசியிருந்தது.
போட்டியின் நடுவர் அனுமதியை அளிக்காத வரையில், தங்களது மருத்துவ குழுவினரால் ஆட்டக்களத்தினுள் நுழைய முடியாது எனவும் அச்சங்கம் விளக்கம் அளித்ததை அடுத்து, BWF அம்முடிவை எடுத்துள்ளது.








