கோலாலம்பூர், அக்டோபர்.03-
காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை நல்குவதற்கு Global Sumud Flotilla மனிதநேயக் குழுவில் இடம் பெற்ற மலேசியாவின் அனைத்து 23 தன்னார்வாலர்களும், இஸ்ரேல் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தங்களை ஹீரோக்கள் போல காட்டிக் கொண்டு, நடப்பு பிரச்னையை மேலும் மோசமாக்க வேண்டாம் என்று இளையோர் குழுவினருக்கு அங்காத்தான் மூடா ஹராப்பான் தலைவர் வூ கா லியோங் நினைவுறுத்தினார்.
இத்தகைய நடவடிக்கை, பிரச்னையை மேலும் அதிகரிக்க செய்யும் அல்லது Global Sumud Flotilla கப்பலில் மனிதநேய பணிக்கு சென்ற பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தும் என்று ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவருமான வூ கா லியோங் அறிவுறுத்தினார்.
தங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும், சிறைப்பிடிக்கப்பட்ட அனைவரும் குறிப்பாக, மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இளையோர் குழுவினர் பிரார்த்தனையில் ஈடுபடலாம் என்று அவர் ஆலோசனை கூறினர்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும், குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர், தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் உங்கள் சொந்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தால் நீங்கள் எப்படி உணருவீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று தனது முக நூலில் வூ கா லியோங் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை முதல், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மற்ற கட்சிகள் தனக்காக ஒரு உரையைத் தயாரிக்கக் காத்திருப்பதற்குப் பதிலாக, GSF சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து உடனடி கருத்துக்களை வழங்கியுள்ளார் என்று கா லியோங் மேலும் கூறினார்.








