மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராக வர முடியும் என்று அறிக்கை வெளியிட்டது தொடர்பில் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், போலீசாரின் விசாரணைக்கு ஆளாகியிருப்பதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை துணை இயக்குநர் ருஸ்டி முஹமாட் இசா உறுதிபடுத்தியுள்ளார்.
அரசியலமைப்பு சட்ட விவகாரம் தொடர்பில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி இஸ்கன்டார் புத்தெரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் எழுதிய ஒரு கட்டுரை தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ருஸ்டி இசா குறிப்பிட்டார்.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை நாளைய தினம் லிம் கிட் சியாங்கிடம் வாக்குமூலம் பதிவு செய்யும். இந்த விசாரணை குற்றவியல் சட்டம் 112 பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படும் என்று ருஸ்டி முஹமாட் இசா தெரிவித்தார்.







