கோவிலுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட ஆத்திரமூட்டும் பதிவுகள் மற்றும் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக பினாங்கு மாநில போலீஸ் துறை இன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் அல்லது பதற்றத்தை உருவாக்கும் வகையிலான எந்தவொரு சட்டவிரோதக் கூட்டத்திலும் பொதுமக்கள் பங்கேற்கவோ அல்லது அத்தகைய கூட்டங்களை முன்னின்று நடத்தவோ வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, பினாங்கு, புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை நுழைவாயில் அருகில் வீற்றிருக்கும் ஒரு இந்து கோயில் தொடர்பில் மக்கள் திரள வேண்டும் என்று சமயப் போதகர் ஜம்ரி வினோத் என்பவர், ஆத்திரமூட்டும் வகையில் பதிவிட்டதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் அளித்த புகாரின் பேரில் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக டத்தோ அசிஸி தெரிவித்தார்.
வரும் மார்ச் 7-ஆம் தேதி சனிக்கிழமை புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனைக்கு அருகில் உள்ள கோவிலுக்கு எதிராக ஒரு ஒன்றுகூடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸ் துறை நிலைமையை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும், தற்போதுள்ள சட்டங்களை யாராவது மீறினால் அவர்கள் மீது சமரசமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டத்தோ அசிஸி எச்சரித்துள்ளார்.









