நவம்பர்- 11
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிரான சிறைத் தண்டனை, 12 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக குறைக்கப்படுவதற்கு மன்னிப்பு வாரியம் எடுத்துள்ள முடிவை எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கு அனுமதி கேட்டு, மலேசிய வழக்கறிஞர் மன்றம் செய்து கொண்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மன்னிப்பு வாரியம் செய்துள்ள இந்த முடிவை சட்டக் கேட்பாடு மற்றும் நீதிமன்றத்தின் வாயிலாக முடிவு செய்ய இயலாது என்று வழக்கு விசாரணையை செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி Kamal Shahid தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனை அல்லது பரிந்துரை என்பது, மாமன்னரால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு நடைமுறைகளில் ஒரு பகுதியாக விளங்குவதால் இவ்விவகாரத்தில் தலையிடவோ அல்லது முடிவு செய்யவோ நீதிமன்றத்தினால் இயலாது என்று நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.








