கோலாலம்பூர், ஜூலை.15-
தீர்ப்பு முறைகேட்டில் சிக்கியதாகக் கூறப்படும் மூத்த நீதிபதி ஒருவர், நாட்டின் தலைமை நீதிபதி பொறுப்புக்கு நியமிக்கப்படக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
புத்ராஜெயாவில் பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்தில் நேற்று நடைபெற்ற டத்தோஸ்ரீ அன்வாருடன் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்வில் எம்.பி.க்கள் சிலர், இந்த கருத்தை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆட்சியாளர்களின் சமஸ்தானபதிகள் மாநாடு இன்று தொடங்கியுள்ள வேளையில் தலைமை நீதிபதி பொறுப்புக்கு அந்த சர்ச்சைக்குரிய நீதிபதியின் பெயரைப் பிரதமர் பரிந்துரைத்தாரா? என்பது விளக்கப்படவில்லை.
எனினும் தாம் யாருடையப் பெயரைச் சமர்ப்பித்தாலும் எதுவும் தமது கைகளில் இல்லை என்றும், அது குறித்து தீர்மானிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் ஆட்சியாளர்கள் என்று அன்வார் விளக்கம் அளித்ததாக பக்காத்தான் ஹராப்பான் வட்டாரங்கள் தெரிவித்தன.








