போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலைச் சேர்ந்த 291 நபர்கள் ஓப் கௌரஸ் என்ற அதிரடி சோதனையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 40 வயதுடைய 'டத்தோ' அந்தஸ்தைக் கொண்ட ஒருவர் இந்தக் கடத்தல் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
மலேசியாவின் பேராக், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் இந்த கும்பல் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஹெராயின், எம்.டி.எம்.ஏ தூள் மற்றும் திரவம், கெட்டமின், எக்ஸ்டசி மாத்திரைகள், எரிமின் 5 மாத்திரைகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட 6.26 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு போதைப்பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கும்பல் போதைப்பொருட்களை மொத்தமாக வாங்கி, பின்னர் அவற்றைச் சிறிய பாக்கெட்களாக மறுபொட்டலமிட்டு பொழுதுபோக்கு மையங்களில் விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 19 முதல் 74 வயதிற்குட்பட்ட அனைவரும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.








