அரசியல் கூட்டணியில் உள்ள பங்காளிக் கட்சிகள் ஒருவரையொருவர் மதித்து நடக்க வேண்டும் என்றும், பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் அம்னோ தனித்துப் போட்டியிடுவதைக் குறிப்பிட்டு, அக்கட்சியை "வஞ்சகர்கள்" என ஜசெக இளைஞரணித் தலைவர் வூ கா லியோங் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் முறையற்றது என்று ஜாஹிட் ஹமிடி சாடினார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய அறிஞர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாஹிட், கூட்டணிக் கட்சிகள் தங்களின் நண்பர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பொறுப்பற்ற அறிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், அரசியல் பங்காளிகள் ஒருவருக்கொருவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மனதில் தோன்றுவதையெல்லாம் பேசாமல் வார்த்தைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








