சுபாங் ஜெயா, பிப்ரவரி.04-
தனது 10 வயது மகளைக் குடும்ப உறுப்பினர்களே துன்புறுத்தியதாகத் தாயார் அளித்த புகாரைத் தொடர்ந்து, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் இது குறித்து புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
புத்ரா ஹைட்ஸில் உள்ள ஒரு குடியிருப்பில் தனது மகள் அவரின் அத்தை ஒருவரால் தாக்கப்பட்டதாகத் அந்த மாது குற்றம் சாட்டியுள்ளார். விசாரணையில், புகார்தாரரும் சந்தேக நபர்களும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தின் போது தடுத்த தன்னையும் அந்த உறவினர்கள் தாக்கியதாக அந்த மாது தெரிவித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 17 முதல் 49 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் விசாரணைக்காக வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்குப் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என வான் அஸ்லான் தெரிவித்தார்.








