மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா, மனிதவள அமைச்சின் கீழ் ஒரு முழுமையான துறையாக தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியச் சமூகத்தின் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 65.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் 6 புதிய திட்டங்களை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பின்படி, 'செலிக் மடானி' திட்டத்தின் கீழ் B40 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பாலர் பள்ளி குழந்தைகளுக்கு தலா 2,530 ரிங்கிட் வரை ஆரம்பக் கல்வி மற்றும் காலை உணவு மானியம் வழங்கப்படவுள்ளது. மேலும், எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் பயிலும் 5 ஆயிரம் B40 மாணவர்களுக்கான 'கல்வி மடானி' இலவச டியூஷன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை வலுப்படுத்த, B40 மற்றும் M40 பிரிவைச் சேர்ந்த 500 இந்திய தொழில்முனைவோருக்கு உயர்வு மடானி திட்டத்தின் கீழ் தலா 50 ஆயிரம் ரிங்கிட் வரை தொழில் மேம்பாட்டு மானியம் வழங்கப்படும். இது ஜூன் 29 ஆம் தேதி முதல் திறக்கப்படவிருக்கிறது என்பதையும் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார். அதே வேளையில், நாட்டின் 9 மாநிலங்களில் உள்ள 38 மாவட்டங்களில் வாழும் 1.7 மில்லியன் இந்தியர்களைச் சென்றடையும் நோக்கில், நாடாளுமன்ற சேவை மையங்களுடன் இணைந்து 12 மில்லியன் ரிங்கிட் செலவில் சிறப்பு மக்கள் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் டத்தோஸ்ரீ ரமணன் விவரித்தார்.
சுகாதாரத் துறையில், 'ஆரோக்கிய மடானி' திட்டத்தின் மூலம் 1,300 சிறுநீரக நோயாளிகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 5 ஆயிரம் ரிங்கிட் வரையிலான டயாலிசிஸ் சிகிச்சை மானியமும், நலிவடைந்த B40 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட் வரை 'துணை மடானி' அவசர நிதி உதவியும் வழங்கப்படவுள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இந்த இரு திட்டங்களுக்கும் ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், தகுதி வாய்ந்த மலேசிய இந்தியர்கள் அனைவரும் www.mitra.gov.my என்ற இணையத்தளத்தின் வழி இதற்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு டத்தோஸ்ரீ ரமணன் கேட்டுக்கொண்டுள்ளார்.















