தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் ஈக்வாலிட்டி வேர்ல்ட் 2026 அழகிப் போட்டியில் பங்கேற்ற மலேசியர் ஒருவரின் காணொளி, சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவரை விசாரணைக்கு அழைக்க மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான ஜாகிம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து நேற்று செப்டம்பர் 1-ஆம் தேதி ஜாகிம் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சிராஜுதீன் சுஹைமி வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்துவதுடன், மாநில இஸ்லாமிய சமயத் துறைகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து, நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அப்போட்டியில் மலேசியர் பங்கேற்றது வருத்தமளிப்பதாகவும், இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்செயல் மத விழுமியங்கள் மற்றும் மனித இயல்புக்கு எதிரானது மட்டுமின்றி, மலேசியச் சட்டங்களையும் மீறுவதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் சம்பந்தப்பட்ட டிக்ட்டோக் காணொளியில், ஆணாக இருக்கலாம் என நம்பப்படும் ஒருவர் பெண்களுக்கான ஆடைகளை அணிந்து போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் காணொளியைத் தொடர்ந்து இணையத்தில் விமர்சனங்களும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








