சரவா, கூச்சிங்கில் ஹோட்டல் ஒன்றை வாங்கியதில் சுமார் 30 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் ஃபெல்டா தலைவர் ஈசா சமாட்டின் தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரிய இறுதி மனுவை புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி அஜிஸா நவாவி தலைமையிலான மூவர் கொண்ட நீதிபதிகள் குழு, இந்த வழக்கில் ஈசா சமாட்டிற்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை எனக் கூறி மனுவை நிராகரித்தது.
இதன் மூலம், நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசரான 76 வயதான ஈசா சமாட்டிற்கு சட்ட ரீதியான அனைத்து வழிகளும் மூடப்பட்டுவிட்டன. கடந்த 2021-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 15.5 மில்லியன் ரிங்கிட் அபராதத்தில் இருந்து தப்பிக்க, மாமன்னரின் 'அரச மன்னிப்பு' மட்டுமே தற்போது அவருக்கு இருக்கும் ஒரே இறுதி வாய்ப்பாகும்.








