தெலுக் இந்தான், ஏப்ரல்.11-
மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும், நாடு தழுவிய வீடமைப்புத் திட்டங்கள் திட்டமிட்டபடி முடிக்கப்படும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் உறுதியளித்துள்ளார்.
இன்று தனது நாடாளுமன்றத் தொகுதியான தெலுக் இந்தான், நகராண்மைக்கழக மண்டபத்தில் நோன்புப் பெருநாள் உபசரிப்பு நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஙா கோர் மிங், வீடமைப்புத் திட்டங்களின் இலக்குகளை எட்டுவது குறித்து விவாதிக்க ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு மேம்பாட்டாளர்கள் சங்கம், மலேசிய மாஸ்டர் பில்டர்ஸ் சங்கம் போன்ற பங்குதாரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.
குறிப்பாக மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களை எளிதாக்கவும், விரைவுபடுத்தவும் தேசிய வீடமைப்பு இலாகாவிற்கு சில விதிமுறைகளைத் தளர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில் 'ருமா மெஸ்ரா ரக்யாட்' திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட B40 பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 20,000 வெள்ளி மானியம் தொடரும் என்று அமைச்சர் ஙா உறுதி அளித்தார்.
ஒரு வீட்டின் உண்மையான அடக்க விலை 75,000 வெள்ளியாக இருந்தாலும், மக்கள் 55,000 வெள்ளி மட்டும் செலுத்தினால் போதும். இந்த ஆண்டு 6,545 RMR வீடுகளை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.








