பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19-
பள்ளிகளில் இருமொழி பாடத்திட்டம் - DLP-யை அமல்படுத்துவதில், அரசாங்கம் தயக்கம் கொள்வதையும் காரணங்களையும் தேடுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப, DLP திட்டத்தை பள்ளிகளில் அமல்படுத்தும் அதன் ஆரம்ப கால நடைமுறைகளையே, கல்வியமைச்சு தொடர வேண்டுமென, PAGE எனப்படும் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை பணிக்குழுவின் தலைவர் நூர் அசிமா அப்துல் ரஹீம் வலியுறுத்தினார்.
நடப்பில், பள்ளி மாணவர்களிடையே, ஆங்கில புலமை போதுமானதாக இல்லாத சூழலில், அம்மொழிக்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில் கொண்டவரப்பட்ட DLP திட்டத்தை, அதன் ஆரம்பகால இலக்கிற்கு ஏற்ப, கல்வியமைச்சு தொடர வேண்டும்.
இல்லையென்றால், பள்ளி மாணவர்களிடையிலான ஆங்கில புலமை மேலும் மோசமடையும் என நூர் அசிமா எச்சரிக்கை விடுத்தார்.
DLP திட்டத்தின் வழி, தரம் வாய்ந்த ஆங்கில மொழி ஆசிரியர்களை தருவிக்க முடியும் என நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், நாடு முழுவதும் ஒரு மாநிலத்திற்கு ஒர் ஆங்கில மொழி சார்ந்த இடைநிலைப்பள்ளியை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் கல்வியமைச்சுக்கு பரிந்துரையை முன்வைத்தார்.
DLP திட்டத்தின் ஆரம்பகால நடைமுறையின்படி, அறிவியல் மற்றும் கணித பாடங்களை, ஆங்கில மொழியில் போதிப்பது குறித்து முடிவெடுக்கும் வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல், அந்த நடைமுறை அமலில் இருந்து வந்த நிலையில், அண்மையில் பள்ளி தரப்பினர் குறைந்தது ஒரு வகுப்பை மலாய்மொழி அல்லது தாய்மொழியில் நடத்திட வேண்டுமென கல்வி அமைச்சு புதிய உத்தரவை வெளியிட்டிருந்தது.








