தற்போதைய சூழலில் அரசியலை விட நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், 16-வது பொதுத்தேர்தல் குறித்து இப்போதைக்கு சிந்திக்க வேண்டாம் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று ஈப்போவில் புலாத்தான் சுல்தான் அஸ்லான் ஷா – வில் நடைபெற்ற 'மடானி ரக்யாட்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "அடுத்த ஒரு மாதத்திலோ அல்லது இரண்டு மாதங்களிலோ தேர்தல் நடத்தப்போவதில்லை, எனவே தயவுசெய்து பொறுமையாக இருங்கள். இப்போது வேலை செய்ய வேண்டிய நேரம். அரசியலை ஓரங்கட்டிவிட்டு, நாட்டைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம்," என்றார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் உலகப் பொருளாதாரம், எண்ணெய் விலை மற்றும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இக்கட்டான இச்சூழ்நிலையில் தேசிய நிலைத்தன்மையே முக்கியம் என வலியுறுத்தினார்.
மேலும், பொது நிதியைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்கில், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பேராக் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாரானி முகமது மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.








