இன்று இங்குள்ள ஜாலான் புக்கிட் இம்பியான் செனாய்யில் சாலைத் தடுப்புச் சுவரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில் இரு இந்திய இளைஞர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
அதிகாலை 3.15 மணிக்கு இச்சம்பவம் தொடர்பில் தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாக கெம்பாஸ் தீயணைப்பு - மீட்புப் படையின் கொமான்டர் ஒபெராசி மூத்த தீயணைப்பு அதிகாரி வான் நோர் எஃபென்டி வான் யூசோஃப் தகவல் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, கெம்பாஸ், ஸ்கூடாய் நிலையங்களில் இருந்து 20 அதிகாரிகள் அவசர சேவை உதவி பிரிவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவ்விபத்தில் ஐவர் பயணித்த ப்ரோத்தோன் வீரா கார் சாலைத் தடுப்பை மோதியது. காரில் சிக்கி இருந்த அனைவரையும் மீட்கும் பணியின் தமது அதிகாரிகள் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
சம்பவ இடத்தில் 23 வயது என். கதிரவன், 20 வயது எம் அரவிந்தன் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் 22 வயது வி தினேஸ்வரன் படுகாயமடைந்ததாகவும். 24 வயது எஸ். அரிவின், 36 வயது முஹமாட் ஷஃபிக் அப்துல்லா சொற்பக் காயங்களுடன் தப்பியதாகவும் வான் நோர் எஃபென்டி குறிப்பிட்டார்.








