மலேசியாவின் மூத்த நகைச்சுவை நடிகர் சத்யா, உடல்நலக்குறைவால், அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி-யின் சிறப்பு அதிகாரியான அர்விந்த் அப்பளசாமி அவரை இன்று நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
“பி மை பி மை டாங் து” என்ற பிரபல சிட்காம் நிகழ்ச்சியின் மூலம், மலேசிய மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த நடிகர் சத்யா, கடந்த திங்கட்கிழமை சுயநினைவிழந்த நிலையில் அம்பாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
62 வயதான சத்யாவின், இடது காலானது, ஏற்கனவே அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், இம்முறை முழங்காலுக்கு மேலே மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முந்தைய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடம் மாசுபட்டு, சீழ் பிடித்திருப்பதால், கடுமையான நோய் அவரது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க, இந்த தீவிர சிகிச்சை அவசியம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நீண்ட கால நீரிழிவு நோய் காரணமாக சத்யாவின் வலது காலின் மூன்று விரல்கள் கடந்த ஆண்டு ஜூலை 31 அன்று துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில், அம்பாங் மருத்துவமனைக்கு வருகை புரிந்த அர்விந்த் அப்பளசாமி, சத்யாவையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதேவேளையில், சத்யாவின் சிகிச்சைக்காக 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியும் வழங்கினார்.
நம்மையெல்லாம் தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்து மகிழ்ச்சிபடுத்திய நடிகர் சத்யாவிற்கு, இந்த நிதியுதவியை செய்வது நமது கடமை என்றும், நேரடியாக சென்று இந்த நிதியுதவியை வழங்குமாறு துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி தன்னிடம் கூறியதாகவும் அர்விந்த் அப்பளசாமி குறிப்பிட்டார்.
இந்நிலையில், நிதியுதவியைப் பெற்றுக் கொண்ட சத்யா, துணைப் பிரதமருக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.










