May 3, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

Share:

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 50,000 ரிங்கிட் தொகையை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைமைச் செயல் அதிகாரி, கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் இன்று தான் குற்றமற்றவர் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பெர்சத்து கட்சியின் பொதுச்செயலாளர் ஹம்சா சைனுடினின் மகன் பைசல் ஹம்சாவிடமிருந்து, அவர் அப்பணத்தைப் பெற்றதாகக் கூறி இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குசைரி யாயா என்ற அந்த அதிகாரி, பைசல் ஹம்சாவிடமிருந்து எந்தவிதப் பிரதிபலனும் இல்லாமல் அப்பணத்தைப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பைசல் ஹம்சா ஒரு பொது ஊழியராக இருக்கும் நிலையில், அவரோடு அதிகாரப்பூர்வத் தொடர்புகள் இருப்பது தெரிந்திருந்தும் கூட, குசைரி அப்பணத்தைப் பெற்றதாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 165-வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு, மே மாதத்தில், கோலாலம்பூர் சென்ட்ரல் பகுதியில் உள்ள ஸ்டேசன் சாலை 5-ல் அமைந்துள்ள மலேசிய நிறுவனங்கள் ஆணையத் தலைமையகத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டை எதிர்கொண்ட குசைரி யாயா, அமர்வு நீதிமன்றத்தில் இன்று தனது குற்றத்தை மறுத்து தன்னை நிரபராதி எனத் தெரிவித்துள்ளார். குசைரி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படலாம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுசானா ஹுசின், 15,000 ரிங்கிட் பிணைத் தொகையை ஓர் உத்தரவாதத்துடன் வழங்க அனுமதி அளித்தார். மேலும், வழக்கு முடியும் வரை அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையானது வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Related News