புத்ராஜெயா,ஆகஸ்ட் 27-
ஓர் இந்திய ஆடவரை வெட்டிக்கொன்றதுடன், அவரின் தம்பியை மலாக்கா ஜாசின் மருத்துவமனை வரை துரத்திச் சென்று கார் கண்ணாடியை உடைத்து, சேதப்படுத்தியதுடன், அந்த மருத்துவமனையில் பெரும் அட்டூழியம் புரிந்த முகமூடிக்கும்பல், குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களா? என்பது குறித்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
பாராங்கை ஆயுதமாக கொண்டு இந்த தாக்குதலை நடத்திய கும்பலில், இதுவரையில் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ஜமீல் ரட்ஸி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலாக்கா, ஜசின், ரிம் என்ற இடத்தில் உள்ள ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தின் முன்புறம், நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் கனரக வாகன நடத்துநரான 24 வயது வினோத் மூர்த்தி என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜாசின், ரிம், தமன் மெஸ்ரா ரிம்- மைச் சேர்ந்த வினோத் மூர்த்தி கொலை செய்யப்பட்டது மற்றும் அவரின் தம்பியை ஜாசின் மருத்துவமனை வரை துரத்திச் சென்று, மருத்துவமனை வளாகத்தில் அட்டூழியம் புரியப்பட்ட சம்பவத்தில் குண்டர் கும்பல் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தற்போது பல கோணங்களில் விசாரணை செய்து வருவதாகஅஹ்மத் ஜமீல் தெரிவித்தார்.








