கோலாலம்பூர், பிப்ரவரி.18-
அரசியல் விமர்சகர் முரே ஹண்டர் பொது மன்னிப்பு கேட்டு, நான்கு இணைய வெளியீடுகளைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, தாய்லாந்தில் அவருக்கு எதிரான குற்றவியல் அவதூறு வழக்கை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி திரும்பப் பெற்றுள்ளது.
ஹண்டர் மலேசியாவில் வசித்த போது அவர் வெளியிட்ட நான்கு இணையக் கட்டுரைகளில் என்சிஎம்சி குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதால், அவருக்கு எதிராக இந்த குற்றவியல் அவதூறு வழக்கு பதிவுச் செய்யப்பட்டதாகவும் எம்சிஎம்சி குறிப்பிட்டுள்ளது.
தாய்லாந்தின் உள்நாட்டு சட்ட கட்டமைப்பு மற்றும் நடைமுறைகளின் படி, குற்றவியல் அவதூறு வழக்கானது சம்பந்தப்பட்ட தாய்லாந்து அதிகாரிகளால் தொடங்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பல மத்தியஸ்த அமர்வுகளுக்குப் பிறகு பேங்காக் தெற்கு குற்றவியல் நீதிமன்றத்தில், ஹண்டருடன் ஒரு சமரசத்தை எட்டியதாகவும் எம்சிஎம்சி விளக்கமளித்துள்ளது.
இதனையடுத்து, ஒரு தீர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இவ்வழக்கை திரும்பப் பெறுவதற்கான முடிவை எடுத்த எம்சிஎம்சி, அதனைத் தாய்லாந்து குற்றவியல் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.








