Jun 27, 2026
Thisaigal NewsYouTube
பங்கோர் விபத்து: ‘ஆம்புலன்ஸ் தாமதம்’ என்பது அப்பட்டமான பொய் - டத்தோ அ.சிவநேசன் கடும் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

பங்கோர் விபத்து: ‘ஆம்புலன்ஸ் தாமதம்’ என்பது அப்பட்டமான பொய் - டத்தோ அ.சிவநேசன் கடும் எச்சரிக்கை

Share:

பங்கோர் தீவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பல் மருத்துவர் டாக்டர் பவித்ரா மோகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் "ஆம்புலன்ஸ் தாமதம்" என்ற குற்றச்சாட்டை பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஆம்புலன்ஸ் வர இரண்டு மணி நேரம் தாமதமானதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது என டத்தோ சிவநேசன் விளக்கமளித்தார். அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, காலை 10.57 மணிக்கு அவசர அழைப்பு பெறப்பட்டு, 11.10 மணிக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டு, அடுத்த இரண்டே நிமிடங்களில் அதாவது 11.12 மணிக்கு சம்பவ இடத்தை சென்றடைந்துவிட்டது.

"மருத்துவக் குழுவினர் விரைவாகச் செயல்பட்ட போதிலும், அங்கிருந்த நபர் ஒருவர் ஊழியர்களை மிரட்டி, அவதூறாகப் பேசியுள்ளார். இது தொடர்பாகப் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது," என்று ஈப்போவில் பேரா மாநில அரசு கட்டட அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ சிவநேசன் விவரித்தார்.

பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த டத்தோ சிவநேசன் , விசாரணையை விரைவுபடுத்த மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவரைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது பேரா மாநில துணை சபாநாயகர்ஜென்னி சோய் டிசி ஜென் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related News