சுங்கை பட்டாணி, தாமான் ரியா ஜெயா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 69 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. அந்த நபர் இறந்து சுமார் நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம் என்று உடலின் நிலையை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத அண்டை வீட்டார் ஒருவர் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவர் காலமான நிலையில், அந்த மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்ததாகக் குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக மூதாட்டியை வெளியில் காணாததாலும், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாலும் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் உயிரிழந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஹன்யான் ரம்லான் , இந்த மரணம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
உயிரிழந்த மூதாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.









