புத்ராஜெயா,ஜன.19
மாணவர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள், பள்ளி சீருடை அணிய வேண்டும் என்று கல்வி அமைச்சு நிர்ணயம் செய்து இருப்பதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார். மற்ற நாட்களில் விளையாட்டு உடை அணிவதற்கு அனுமதிக்கப்படுவர். தற்போது விளையாட்டு உடை அணிவதற்கு கல்வி அமைச்சு அனுமதித்துள்ள நாட்கள், மூன்று நாட்களாக வரையறுக்கப்படும். குறிப்பாக புறப்பாட நடவடிக்கைகளுக்கு விளையாட்டு உடையை மாணவர்கள் பயன்படுத்தலாம் என்று கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் உறுதிமொழி நிகழ்வில் ஓர் சுற்றறிக்கையின் வாயிலாக இவ்விவரத்தை கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்அறிவித்துள்ளார்.
மாணவர்கள்,விளையாட்டு உடையை அணிவதற்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் கல்வி அமைச்சு தளர்வு வழங்கி இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.நாட்டில் அப்போது நிலவி வந்த வெப்ப நிலை காரணமாக மாணவர்கள் விளையாட்டு உடையை அணிவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர் . தற்போது வாரத்திற்கு இரண்டு நாட்கள் மாணவர்கள் கட்டாயமாக பள்ளி சீருடை அணிய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.








