கோலாலம்பூர், ஏப்ரல்.26-
தனியார் பல் கிளினிக்குகளில் சிகிச்சைகளுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்கள் குறித்து மக்கள் மத்தியில் கவலைகள் எழுந்து வருகின்றன. தனியார் பல் கிளினிக்குகளால் விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்களை சுகாதார அமைச்சும், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சும் / முறைப்படுத்த வேண்டும் என்று மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ T. முருகையா கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்விவகாரம் தம்முடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட டத்தோ முருகையா, பல் சிகிச்சைகளுக்கானக் கட்டணங்கள் முறைப்படுத்தப்படாத வரை அவை பொது மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் என்றார்.
தனியார் பல் கிளினிக்கிற்கு ஒரு முறை சென்றால், 500 முதல் 2,500 ரிங்கிட் வரை கட்டணங்கள் விதிக்கப்படுவது குறித்து ஏராளமான புகார்களைத் தாம் பெற்றுள்ளதாகவும், இது உண்மையிலேயே கவலையை அளிக்கிறது என்றும் டத்தோ முருகையா குறிப்பிட்டார்.
மக்கள் ஏற்கனவே பொருளாதார அழுத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் போராடி வரும் இவ்வேளையில் இத்தகைய அதிகப்படியான கட்டணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்நிலையில், சுகாதார அமைச்சும், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சும் தனியார் பல் கிளினிக்குகளில் பல் சிகிச்சைகளுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்கள் முறைப்படுத்தவும், தரப்படுத்தவும் ஒரு வழிமுறையை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார்.
மக்களின் சுகாதாரத் தேவைகளை யாரும், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை உறுதிச் செய்ய இந்நடவடிக்கை அவசியமாகும் என்று டத்தோ முருகையா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








