ஷா ஆலாம், பிப்ரவரி.19-
மத்திய அரசுக்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கும் இடையே கையெழுத்தான 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மெகா ஒப்பந்தம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஓர் அரச விசாரணை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் இன்று வலியுறுத்தியுள்ளது.
ஊழல் மற்றும் முறைகேடுகளை வேரோடு அகற்றுவதில் அரசாங்கம் உண்மையிலேயே உறுதியாக இருந்தால், இதற்கான கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் நாடாளுமன்ற கொறடா டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹாசன் கேட்டுக் கொண்டார்.
அரசாங்கம் மௌனம் காக்கவோ அல்லது நடைமுறைச் சிக்கல்களைக் கூறித் தப்பிக்கவோ கூடாது. உண்மையை அறிய மக்களுக்கு உரிமை உண்டு, என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
1.1 பில்லியன் ரிங்கிட் என்பது சிறிய தொகையல்ல, இது பொதுமக்களின் பணம் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை உள்ளடக்கியது என்றும் தக்கியுடின் கூறினார்.
முன்னதாக, மலேசியாவிற்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையே அவசரமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஒப்பந்தம் குறித்துச் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இது தொடர்பாக விசாரணை கோப்புகளைத் திறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.








