கோலாலம்பூர், டிச.9-
முஸ்லிம் அல்லாத எட்டு பெற்றோர்கள் தொடுத்துள்ள வழக்கிற்கு தீர்வு காணப்படும் வரை ரகசிய மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வீடியயோவை சமூக வலைத்தளத்திலிருந்து அகற்றுமாறு சர்ச்சைக்குரிய சமயப் போதகர் பிர்டவுஸ் வோங்கிற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வீடியோவை, பிர்டவுஸ் வோங் , சமூக வலைத்தளத்தில் பார்வைக்கு வைத்திருப்பது, கூட்டரசு அரசியலமைப்புச்சட்டம் 12 பிரிவு, நான்காவது ஷரத்தை மீறுவதாக உள்ளது என்பது என்பது தெளிவாகிறது என்று ஒரு தரப்பாக தொடுத்த வழக்கில் நீதிபதி அமர்ஜிட் சிங் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பூர்வாங்க வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறும் பட்சத்தில், வழக்கை தொடுத்துள்ள வாதிக்கு வழக்கு செலவுத் தொகையாக 5 ஆயிரம் ரிங்கிட் வழங்க வேண்டும் என்று , பிர்டவுஸ் வோங்கிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அந்த சர்ச்சைக்குரிய வீடியோ, சமூக வலைத்தளத்திலிருந்து ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டதையும் , பிர்டவுஸ் வோங் வழக்கறிஞர் நோராசாலி நோர்டின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வழக்கில் எட்டு பெற்றோர்கள் சார்பாக வழக்கறிஞர் எம். விஸ்வநாதன், வி. பூஷன் மற்றும் வி. சஞ்யாய் ஆகியோர் ஆஜராகினர்.








