கோலாலம்பூர், நவ. 13-
பெட்ரோல் ரோன் 95 உதவித் தொகைக்கான இலக்குக்குரிய ஒருங்கிணைப்புத்திட்டம், அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் போது, மலேசியர்களில் பெரும்பான்மையினர் பெட்ரோல் ரோன் 95 க்குரிய உதவித் தொகையை பெறுவதற்கு தகுதி பெறுவர் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி நம்பிக்கைத் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதைத் போன்று பெட்ரோல் ரோன் 95 உதவித் தொகைக்கான இலக்குக்குரிய ஒருங்கிணைப்புத்திட்டம், அடுத்த ஆண்டு மத்திய வாக்கில் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரபிஸி ரம்லி குறிப்பிட்டார்.
இதன் மூலம் பெட்ரோல் ரோன் 95 –க்கு பெட்ரோல் நிலையங்களில் இரண்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். ஒன்று உதவித் தொகைக்குரிய பெட்ரோல் மற்றொன்று உதவித்தொகை இல்லா பெட்ரோல் ஆகும். இந்த சலுகைத் திட்டத்தை அமல்படுத்தப்படும் போது, மலேசியர்களில் 85 விழுக்காட்டினர் இயல்பாகவே உதவித் தொகைக்குரிய பெட்ரோலை தங்களின் வாகனங்களில் நிரப்பிக்கொள்வதற்கு தகுதி பெறுவர். உயர் வருமானம் பெறுகின்ற வெறும் 15 விழுக்காட்டினர் மட்டுமே உதவித் தொகையில்லா பெட்ரோலை பயன்படுத்தும் நிலை ஏற்படலாம் என்று ரபிஸி ரம்லி விளக்கினார்.
சம்பந்தப்பட்டவர்கள், உதவித்தொகை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளார்களா? என்பதை கண்டறிவதற்கு அவர்களின் பின்னணி குறிப்பு தரவுகளை கொண்டுள்ள அடையாளக்கார்டு வழி உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.








