கோலாலம்பூர், நவ.13-
தனது தாயாரை கொன்று மூன்று ஆண்டு காலமாக வீட்டின் ஐஸ் பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த 53 வயது சந்தேகப்பேர்வழி, வீட்டை விட்டு அதிகமாக வெளியேறுவதில்லை என்று அண்டை வீட்டுக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் அண்டை வீட்டுக்காரர்கள் யாரிடமும் அவர் பேசுவதில்லை, பழகுவதும் இல்லை என்று கொலை நடந்த வீட்டின் அருகில் வசித்து வரும் அண்டை வீட்டுக்காரர்கள் பேட்டியளித்துள்ளனர்.
கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, ஓ.யு.ஜி. கார்டனில் ஒரு வீட்டில் ஐஸ் பெட்டியிலிருந்து நேற்று காலையில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். இச்சம்பவம் அக்கம், பக்கத்தவர்களை மிகுந்த பீதியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சொந்த மகனால் கொலை செய்யப்பட்ட அந்த மூதாட்டியின் உடலை அந்த நபர் வீட்டிற்குள் ஐஸ் பெட்டிக்குள் இறக்கி, கடந்த மூன்று ஆண்டு காலமாக ரகசியமாக வைத்திருந்தது நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் தானே முன் வந்து போலீசாரிடம் தகவலை தெரிவித்ததைத் தொடர்ந்து அவ்வீட்டிற்கு விரைந்த போலீசார் அந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டனர்.
தனது தயாார், சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்பததற்காக அவரை அடித்துக்கொன்றதாக 53 வயதுடைய அந்த இந்திய இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு மர்ம ஆசாமியைப் போல் செயல்பட்ட அந்த நபர், வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுவதை தாங்கள் நேரில் கண்டதாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தெரிவித்தார்.
உணவுப்பொருட்கள் வாங்குவதற்காக அவர் அவ்வாறு வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று தாங்கள் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் , இன்று நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.








