கோலாலம்பூர் MRR2 நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்தார்; அவரது வருங்கால கணவர் படுகாயமடைந்தார்.
கெப்போங் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பள்ளிப் பேருந்தின் பின்புறத்தில் மோதியதால் இந்த விபத்து நேரிட்டது. ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் எச்சரிக்கை பலகைகள் ஏதும் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். கார் ஓட்டுநரான 31 வயது ஆடவர் செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போக்குவரத்து சட்டம் 41 ஆவது பிரிவின் கீழ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








