கோலாலம்பூர், நவ. 22-
இன்று காலையில் கோலாலம்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததுடன் ஒரு வயது ஆண் குழந்தை கடும் காயங்களுக்கு ஆளாகியது.
இவ்விபத்து இன்று காலை 7.20 மணியளவில் கோலாலம்பூர், சிகாம்புட் டோல் சாவடியை நோக்கி டூத்தா - உலுகிள்ளான் நெடுஞ்சாலையின் 2ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. 37 வயது ஆடவர், தனது மூன்று குடும்ப உறுப்பினர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஒரு லோரியின் பின்புறம் மோதியதாக நம்பப்படுகிறது.
இவ்விபத்து குறித்து காலை 7.30 மணிக்கு தாங்கள் அவசர அழைப்பைப்பெற்றதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
சாலையோரத்தில் பழுதடைந்த லோரியில் இருந்த பொருட்களை மற்றொரு லோரியில் இடமாற்றம் செய்து கொண்டு இருந்த போது ஒரே குடும்பத்தினர் பயணித்த மோட்டார் சைக்கில், அந்த லோரியின் பின்புறம் மோதியதாக நம்பப்படுகிறது.
உணவுப்பொருட்களை ஏற்றியிருந்த அந்த பழுதடைந்த லோரி குறித்து இதர வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் 39 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், லோரிக்கு பின்னால் ஐந்த பாதுகாப்பு கோனை வைத்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொருட்களை ஒரு லோரியிலிருந்து இன்னொரு லோரிக்கு மாற்றிக்கொண்டு இருந்த போது, இரண்டு தொழிலாளர்கள் வாகனங்களை எச்சரிக்கும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.
அந்த மோட்டார் சைக்கிளோட்டி, ஒரு லோரியை முந்திச்செல்லும் முயற்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பழுதடைந்த லோரியில் மோதியதாக நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் 37 வயது நபர், அவரின் 27 வயது மனைவி மற்றும் நான்கு வயது பெண் பிள்ளை சம்பவ இடத்திலேயே மாண்டனர். மற்றொரு குழந்தை கடும் காயங்களுக்கு ஆளாகியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.








