குவாந்தான், ஜூலை.16-
வீடு புகுந்து திருடிய குற்றத்திற்காக மாற்றுத் திறனாளி நபர் ஒருவருக்கு 14 மாதங்கள் சிறைத் தண்டனையும், 3,000 ரிங்கிட் அபராதமும் விதித்து குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
33 வயதான எஸ். குணா என்ற அந்த நபர், கடந்த மாதம் வீடு புகுந்து தங்கச் சங்கிலி, தங்கக் கைக்காப்பு, மூன்று தங்க டாலர்கள் மற்றும் ஒரு கைபேசி ஆகியவற்றைத் திருடிய குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் எலினா ஒத்மான் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளார்.
கடந்த ஜூலை 3-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளில் இருந்து இந்தச் சிறைத் தண்டனை தொடங்கும் என்றும், அபராதத்தைக் கட்டத் தவறினால் கூடுதலாக ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவருடன் இணைந்து இக்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மியான்மார் நாட்டைச் சேர்ந்த 26 வயது முகமது ஷரூஃப் நிசாம் முகமது ஹனிஃப் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு 4,500 ரிங்கிட் பிணைத் தொகை விதித்து வழக்கை வரும் ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.








