கோலாலம்பூர், பிப்ரவரி.12-
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூரில் காணாமல் போனதாக நம்பப்படும், dementia நோயால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் பிரஜையை தேட மலேசிய போலீசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
76 வயதான ஹாலிம் யுனோஸ் என்ற அந்நபர், கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி, கோலாலம்பூர் சௌகிட் பகுதியிலுள்ள அங்குன் ரெசிடென்சஸ் என்ற இடத்தில் கடைசியாகக் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருமண விழா ஒன்றிற்காக குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்ட அந்த முதியவர், விழா மண்டபத்திலிருந்து நள்ளிரவு 1 மணியளவில் வெளியேறியிருப்பது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், காணாமல் போன அந்நபரைத் தேட பொதுமக்களின் உதவியையும் நாடுவதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி ஹஜி அடாம் தெரிவித்துள்ளார்.
அந்த முதியவர், பச்சை நிற batik சட்டையும், பளுப்பு நிற கால்சட்டையும் அணிந்திருந்ததாகவும், அவரைப் பற்றிய தகவல் தெரியும் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








