அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுவாகவே உள்ளது என்றும், இதற்கு மாறாக வெளியாகும் கருத்துகள் உண்மையல்ல என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், அமைச்சரவைக்குள் நிலவும் நல்ல ஒத்துழைப்பு, நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்திய முக்கிய காரணிகளில் ஒன்றாகும் என்றும், அதன் மூலம் அரசாங்கத்தால் நாட்டின் எதிர்காலப் பாதையைத் தெளிவாகத் திட்டமிட முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்ராஜெயாவில் தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சைச் சேர்ந்த ஊழியர்களுடனான சந்திப்பில் அன்வார் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதுள்ள அரசியல் நிலைத்தன்மையைப் பயன்படுத்தி, நாட்டுக்கு நன்மை தரும் திட்டங்களையும் கொள்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், இதுவரை கிடைத்துள்ள சாதனைகளைக் கண்டு அரசாங்கம் அதிகப்படியான தன்னிறைவு அல்லது அலட்சிய மனப்பான்மைக்கு ஆளாகக் கூடாது என்றும், அரசாங்கத்தின் செயல்திறனை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் நினைவூட்டியுள்ளார்.








