கோலாலம்பூர், ஜனவரி.13-
17 வயது பையனின் மைக்காட் விண்ணப்பத்தைத் தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் ஏற்றுக் கொண்டதையடுத்து, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்கு எதிராகத் தொடரவிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைக் கைவிடுவதாக லிபெர்டி வழக்கறிஞர்கள் அமைப்பின் ஆலோசகர் என். சுரேந்திரன் இன்று அறிவித்துள்ளார்.
அந்தப் பையனை மலேசியக் குடிமகனாக அங்கீகரித்து, அவருக்கு 30 நாட்களுக்குள் மைகாட் வழங்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
நீதிமன்ற உத்தரவு இருந்த போதிலும், ஆரம்பத்தில் ஜேபிஎன் அதிகாரிகள் மைகாட் வழங்க மறுத்து, 24 வகையான தேவையற்ற விண்ணப்பப் படிவங்களைச் பையனிடம் வழங்கியதாக சுரேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். இது "அதிகாரத்துவ பைத்தியக்காரத்தனம்" என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
அந்தப் பையனின் விண்ணப்பத்தை ஏற்க ஜேபிஎன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தால், உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர்கள் எச்சரித்திருந்தனர்.
இன்று காலை அந்தப் பையன், புத்ராஜெயாவில் உள்ள ஜேபிஎன் தலைமையகத்திற்குச் சென்ற போது, அதிகாரிகள் அவரது மைகாட் விண்ணப்பத்தை முறைப்படி ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து, அமைச்சருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதில்லை என்று சுரேந்திரன் உறுதிப்படுத்தினார்.
17 வயதுடைய அந்த பையன், கடந்த மாதம் எஸ்பிஎம் தேர்வை எழுதி முடித்த ஒரு மாணவர் ஆவார். இவர் தனித்து வாழும் தனது தாயுடன் வசித்து வருகிறார். பையனின் அசல் பிறப்புச் சான்றிதழ் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டதாகக் கூறி, ஜேபிஎன், அவருக்கு மைகாட் வழங்க நீண்ட காலமாக மறுத்து வந்தது. எனினும், கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி உயர் நீதிமன்றம் அவரை மலேசியக் குடிமகனாக அங்கீகரித்து தீர்ப்பளித்தது.








