சிலாங்கூர், கோத்தா டாமன்சாராவில் ஜாலான் கென்யாலங் 11/6B -கில் அமைந்துள்ள இரண்டு மாடி இரட்டை வீட்டில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 54 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் உயிரிழந்தார்.
காலை 9.09 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, வீட்டின் சுமார் 40 சதவீதப் பகுதி தீயினால் பாதிக்கப்பட்டிருந்தது என்று சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
வீட்டின் மேல் தளத்தில் உள்ள வராண்டா பகுதியில் சுயநினைவின்றி இருந்த நபர் 9.30 மணியளவில் மீட்கப்பட்டார். இருப்பினும், காலை 11.15 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்துப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.









