கோலாலம்பூர், டிச.9-
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக திவால் நோட்டீஸ் பிரகடனத்தை கோரி, டிஏபி தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான லிம் குவான் எங், வழக்கு மனு ஒன்றை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
யாயாசான் அப்துல் புகாரி எனும் இஸ்லாமிய கொண்டு அமைப்புக்கு வரி விதிக்குமாறு தாம் உத்தரவிட்டதாக கூறி, பொய்யான தகவலை பரப்பி, தமக்கு அவதூறு விளைவித்த குற்றத்திற்காக உயர் நீதிமன்றம் தமக்கு 13 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்த முகைதீன் தவறிவிட்டதாக லிம் குவான் தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் உயர் நீதிமன்றம் லிம் குவான் எங்கிற்கு வழங்கப்பட்ட சாதகமான தீர்ப்பை எதிர்த்து தாங்கள் மேல்முறையீடு செய்யவிருப்பதால், திவால் நோட்டீஸ் பிரகடன நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்யவிருப்பதாக முகைதீனின் வழக்கறிஞர் சித்தன் ஜெத்வானி தெரிவித்தார்.








