ஜொகூர் மாநிலத்தின் இன்றைய வளர்ச்சி மற்றும் பல்வேறு திட்டங்களின் வெற்றி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடாணி அரசுடன் அம்மாநில அரசு கொண்டுள்ள நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே சாத்தியமாகியுள்ளது என்று அங்காத்தான் மூடா கெஅடிலான் தகவல் தொடர்புத் தலைவர் டேனிஷ் ஹைருடின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த ஆதரவும் அர்ப்பணிப்பும் இல்லாதிருந்தால், ஜொகூர் மாநிலம் மலேசியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக உருவெடுத்திருக்க முடியாது என்றும், உலகளாவிய முதலீட்டாளர்களைக் கவர்ந்து 110 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்றிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் (JS-SEZ), ஜொகூர் பாலம் நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் ஆர்.டி.எஸ் திட்டம் மற்றும் முக்கிய வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் போன்ற பல பெரிய திட்டங்கள் மத்திய அரசின் நிதி மற்றும் ஒப்புதலோடு, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் மூலமே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, வரவிருக்கும் தேர்தலில் ஜொகூர் மக்கள் இந்த உண்மைகளை நேர்மையுடன் உணர்ந்து, முறையான மதிப்பீட்டைச் செய்து நல்லதொரு முடிவை எடுப்பார்கள் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.








