டிச.10-
குழந்தைகளின் உயர்நிலைச் சிந்தனைத் திறன் ஆளுமையைக் கண்டறியும் தேசிய நிலையிலான உயர்நிலைச் சிந்தனைத் திறன் புதிர்ப்போட்டியை இல்ஹாம் கல்வி கழகம் - டத்தோ ஸ்ரீ ஆறுமுகம் அறவாரியத்தின் ஆதரவில் கடந்த டிசம்பர் 7-ஆம் நாள், சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டி மலேசிய கல்வி அமைச்சின் அனுமதியுடன் நடைபெற்றது.
பெட்டாலிங் ஜெயாவிலுள்ள, Brickfields ஆசியக் கல்லூரியில் இப்போட்டி நடைபெற்ற நிலையில், நாடு முழுவதுமிருந்து 85 மாணவர்கள் அதில் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தொடக்கச் சுற்று இயங்கலையில் நடைபெற்ற வேளையில், அதில் பங்கெடுத்த 500 மாணவர்களில் அதிக புள்ளிகளைப் பெற்ற 85 மாணவர்கள் இறுதிச் சுற்றில் களம் இறங்கினர்.
2024 தேசிய நிலையிலான உயர்நிலைச் சிந்தனை திறன் புதிர்ப்போட்டியில் பேராக், சித்தியவான் மகா கணேச வித்தியாசாலை மாணவர் தி. தேசிகன் கணித மேதை இராமானுஜம் விருதினை வென்றார். அவருக்கு ஆயிரம் ரிங்கிட் ரொக்கம், வெற்றிக் கிண்ணம், நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

வேளாண் அறிவியலாளர் எம்எஸ் சுவாமிநாதன் விருதினை Haji Manan தமிழ்ப்பள்ளி மாணவர் , எஸ். கவீஷன் பெற்ற வேளை இயற்பியல் விஞ்ஞானி எஸ்என் போஸ் விருதினை வென்றார் Mak Mandin தமிழ்ப்பள்ளி மாணவி, ஆர். மலர்விழி. இருவருக்கும் முறையே 750, 500 ரிங்கிட் ரொக்கம், வெற்றிக் கிண்ணம், நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
நான்காம் நிலையிலிருந்து 10-ஆம் நிலை வரை வாகை சூடிய மாணவர்களுக்கு 50 ரிங்கிட் ரொக்கம், வெற்றிக் கிண்ணம், நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
Kluang, Haji Manan தமிழ்ப்பள்ளி மாணவர் அறுவர் இறுதிச் சுற்றில் களமிறங்கி; அவர்களில் மூவர் முதல் 10 இடங்களில் வாகை சூடிய நிலையில், அப்பள்ளி திரட்டுப் புள்ளிகள் அடிப்படையில் APJ அப்துல் கலாம் சுழற்கிண்ணத்தை வென்றது.

புதிர்போட்டியின் நிறைவு விழாவில், நாடறிந்த கல்வியாளர் , காலஞ்சென்ற, கு. நாராயணசாமியின் பெயரில், 'நற்சேவையாளர் விருது' , அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்விருது கல்வித்துறையில், குறிப்பாக, கல்வி - தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் , தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள பேராக், செலாமா தமிழ்ப்பள்ளி தொழில்நுட்ப ஆசிரியர், ரூபன் ஆறுமுகத்திற்கு வழங்கி , சிறப்பு செய்யப்பட்டது.
மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், கல்வியமைச்சின், தமிழ்மொழிக் காப்பக முன்னாள் துணைத்தலைவருமான, கு. நாராயணசாமி, மலேசியக் கல்வித் துறைக்கு ஆற்றிய பெரும்பங்கை சிறப்பிக்கும் வகையில் , இந்த விருது அறிமுகம் செய்யப்பட்டது.









