ஜோகூர்பாரு, டிச.11-
ஜோகூர்பாரு, பெர்மாஸ் ஜெயாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மலேசிய குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகளில் ஐவர் காயமுற்றனர்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் நிகழ்ந்தது. ஜோகூர்பாருவில் தங்கள் பணியை முடித்து விட்டு, 6 குடிநுழைவு அதிகாரிகளும் எம்பிவி வாகனத்தில் கோலாலம்பூருக்கு திரும்பிக்கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.
லோரி ஓட்டுநர் ஒருவர், வேகக்கட்டுப்பாட்டை இழந்ததைத்தொடர்ந்து அந்த கனரக வாகனம் மற்ற வாகனங்களை மோதித்தள்ளியது என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி ரவுப் செலாமாட் குறிப்பிட்டார்.
இதில் லோரி ஓட்டுநர் உட்பட இதர நான்கு வாகனங்களில் இருந்தவர்கள் காயமடையவில்லை. எம்பிவி வாகனத்தில் காயமுற்ற ஐந்து குடிநுழைவு அதிகாரிகள் ஜோகூர்பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.








