கோலாலம்பூர், பிப்ரவரி.24-
தீபகற்ப மலேசியாவில் உள்ள லாரி நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகப் பாதுகாப்பு அளித்து, Tonto மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 12 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று கைது செய்துள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் செயல்பாட்டு துணைத் தலைமை ஆணையர் அஹ்மாட் குசைரி யஹாயா கூறுகையில், எஸ்பிஆர்எம்மின் புலனாய்வுப் பிரிவின் கீழ் உள்ள சிறப்புத் திட்டக் கிளையும், சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவும் இணைந்து இன்று அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரை Op Middleman எனும் சோதனையை மேற்கொண்டன என்று தெரிவித்தார்.
இந்தச் சோதனையின் போது கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் நெகிரி செம்பிலான் பகுதிகளில் உள்ள சில வீடுகள் மற்றும் நிறுவனங்கள் சோதனையிடப்பட்டன. 2023-ஆம் ஆண்டு முதல் இடைத்தரகர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்பட்டதால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது என அஹ்மாட் குசைரி விளக்கினார்.








