ஷா ஆலாம், நவம்பர்.11-
கடந்த வியாழக்கிழமை பூச்சோங், பூசாட் பண்டார் பூச்சோங்கில் உள்ள கடை வீட்டின் படியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததாகச் சந்தேகிப்படும் மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தைக் கொண்டுள்ள ஓர் இந்தியப் பிரஜையின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த 6 இந்தியப் பிரஜைகள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொலையுண்ட நபருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த இந்த ஆறு நபர்களும் இதற்கு முன்பு முக்கிய சந்தேகப் பேர்வழியாக வகைப்படுத்தப்பட்டு இருந்தனர். அறுவரிடமும் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.
அறுவரிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம், இந்த படுகொலை தொடர்பான விசாரணைக்கு வலு சேர்க்கும் வகையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பூச்சோங்கில் தங்கி, டெக்னிஷனாகச் சுயத் தொழில் நடத்தி வந்ததாக நம்பப்படும் 49 வயது இந்தியப் பிரஜை, கடை வீட்டின் படிகட்டில் இறந்து கிடந்தார்.
இந்தக் கொலைக்குக் காரணமான முக்கிய சந்தேகப் பேர்வழியை நோக்கி போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ஷாஸெலி காஹார் குறிப்பிட்டார்.








