வரும் ஜனவரி 25 ஆம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்படவிருக்கும் வேளையில் பத்துமலைத் தைப்பூசத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், தங்களின் வியாபாரப் பொருட்களை வரும் ஜனவரி 21, 22 ஆகிய இரு தேதிக்குள் பத்துமலை வளாகத்திற்குள் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தேதிக்கு பிறகு பத்துமலை வளாகத்திற்குள் பொருட்களை கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்படாது. இது தேவஸ்தானமும், காவல் துறையினரும் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் அவ்விடத்திலேயே நிறுத்தி வைக்கக்கூடாது. வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா வலியுறுத்தினார்.
பத்துமலை வளாகத்திற்கு வெளியில் பலர் அன்னதானம் வழங்குகின்றளனர். ஆனால், அவர்கள் வழங்கும் உணவுகள் சில வேளைகளில் கெட்டுப்போய்விடுவதோடு, அந்த உணவுகளை பொது மக்கள் சாப்பிட்ட பின் பத்துமலை வளாகத்திற்குள் வீசுகின்றனர். அதனால் அசுத்தம் ஏற்பட்டு நோய்கள் பரவுதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே வெளியில் அன்னதானத்தை வாங்கும் பக்தர்கள் அதைச் சாப்பிட்டபிறகு வெளியிலேயே வீசுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொள்வதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
இவ்வாண்டு தைப்பூச விழா எல்லா வகையிலும் சிறப்பாக நடைபெறுதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை தேவஸ்தானம் பெரிதும் எதிர்பார்ப்பதாக டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.








