கோலாலம்பூர், டிசம்பர்.11-
மவுண்ட் கியாராவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தின் போது, அக்குடியிருப்பின் 26-ஆவது மாடியில் உள்ள வீடு ஒன்று, முற்றிலும் எரிந்து தீக்கிரையானதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர், அக்கட்டிடத்தின் தீத் தடுப்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தீயை அணைக்க மிகவும் போராடியதாகத் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், இரண்டு நீர் குழாய்கள் மற்றும் தீயணைப்பு இயந்திரம் ஆகியவற்றின் உதவியோடு, நீரைப் பாய்ச்சி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், அவ்வீட்டின் முற்றத்தில், ஆடவர் ஒருவரின் சடலம், முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.








