கோலாலம்பூர், பிப்ரவரி.06-
தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN- னில் ஒரு மாத காலமாகச் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தற்போது இரவில் தங்குவதற்காகத் தனது இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகளுக்காக அவர் பகல் நேரங்களில் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்ப வேண்டும் என்று அவரது ஊடகச் செயலாளர் Sufi Yusoff தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக, 'தி மைன்ஸ்' பகுதியில் உள்ள தனது இல்லத்திற்குச் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் மகாதீரின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பிசியோதெரபி (Fisioterapi) சிகிச்சைகளுக்கு அவரது உடல் ஒத்துழைக்கும் விதம் குறித்து IJN மருத்துவக் குழுவினர் திருப்தி தெரிவித்துள்ளனர்.








