ஷா ஆலாம், மே.03-
மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளும் சீனப்பள்ளிகளும் மூடப்படாது என்றும், அவை கல்விச் சட்டத்தின் கீழ் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடெக் மீண்டும் உறுதி அளித்துள்ளார். சில தரப்பினர் பரப்பும் தேவையற்ற வதந்திகளைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனக் கேட்டுக் கொண்ட அவர், தமிழ்ப்பள்ளிகளின் இடமாற்றம், பராமரிப்பு தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க ஆண்டுக்கு இருமுறை தலைமையாசிரியர் சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
அனைத்து இன மாணவர்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அமைச்சர், இந்தியச் சமூகத்தினரின் கவலையைப் போக்கும் வகையில் நன்னெறிக் கல்வி பாடத்தின் மதிப்பெண் வழங்கும் முறையில் மேம்பாடுகளைச் செய்யத் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், 10A எடுத்த மாணவர்களுக்கு அவர்களின் இனப் பின்னணி எதுவாக இருந்தாலும் மெட்ரிகுலேஷன் திட்டத்தில் தானியங்கி முறையில் இடங்கள் வழங்கப்படும் என்ற கொள்கையை மடானி அரசாங்கம் தொடர்ந்து தற்காக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.








