கோலாலம்பூர், டிசம்பர்.07-
பருவமழைக் காலத்தில் வெள்ள நீரில் குழந்தைகள் விளையாடுவதைத் தடுக்கப் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இத்தகைய செயல்பாடு பெரும் துயரத்தை ஏற்படுத்தலாம் என்றும் மகளிர், குடும்ப, சமூகநல மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி வலியுறுத்தினார். வெள்ளத்தில் விளையாடுவது என்பது வழக்கமாகி விட்டது. ஆனால் அந்த வேடிக்கையான செயல் சோகமாக மாறிவிடக் கூடாது. எனவே, ஆபத்து நிறைந்த பகுதிகளில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சரவாக், சந்துபோங்கில் இரண்டு சிறுமிகள் கிட்டத்தட்ட 24 மணி நேரமாகக் காணாமல் போய்க் கண்டுபிடிக்கப்பட்ட மிக அண்மைய சம்பவத்தை அவர் ஒரு நினைவுறுத்தலாகக் குறிப்பிட்டார். மேலும், இணையப் பாதுகாப்பையும் சட்ட விழிப்புணர்வையும் மேம்படுத்தும் வகையில், காவற்படை கல்வி அமைச்சுடன் இணைந்து, குழந்தைகளுக்கானப் பாதுகாப்புச் சட்டங்களையும் விழிப்புணர்வுத் திட்டங்களையும் அமைச்சு செயல்படுத்தி வருவதாகவும் நான்சி கூறினார்.








