நவ. 23-
நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் மாநில அளவிலான 2024 ஆம் ஆண்டுக்கான தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பு, இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தம்பின், Dewan Arena Tampin மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மூவினங்களைச் சேர்ந்த சுமார் ஏழாயிரம் பேர் இந்த தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய போதிலும் மக்கள் பிற்பகல் 2 மணிக்கே மண்டபத்தில் மக்கள் திரள ஆரம்பித்தனர்.
நெகிரி செம்பிலான் Yang di-Pertuan Besar, UNDANG TAMPIN, மாநில மந்திரி பெசார் Dato Seri Utama Aminuddin Harun, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்..

Repah சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீரப்பன் சுப்பிரமணியம் முன்னிலையில் மிக நேர்த்தியான ஏற்பாடுகளுடன் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பில் இந்தியர்களின் உணவு வகைகள், பதார்த்தங்கள் மற்றும் மூவின மக்களின் உணவு வகைகள் என சுவைமிகுந்த சுமார் 50 வகையான உணவு வகைகள் வருகையாளர்களுக்கு பரிமாறப்பட்டன.
உள்ளூர் பிரபல கலைஞர் சந்தேஷ் உட்பட மூவின கலைஞர்களின் கலாச்சார நடனங்கள், பாடல்கள் மற்றும் இதர அங்கங்கள் இந்த தீபாவளி பொது உபசரிப்புக்கு மெருகூட்டின..

நிகழ்வில் கலந்து சிறப்பித்த நெகிரி செம்பிலான் Yang di-Pertuan Besar, சுமார் 500 சிறார்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்வு, மிக நேர்த்தியாகவும், கட்டுக்கோப்புடனும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது குறித்து Yang di-Pertuan Besar தமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.
தவிர தமது ரெப்பா சட்டமன்றத் தொகுதியில் நிகழ்வை பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக முன்னெடுத்த வீரப்பனுக்கு மாநில மந்திரி பெசார் Dato Seri Utama Aminuddin Harun, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டர்.









